வறண்ட நாட்கள்!

கண்ணே! நீ இல்லாத இந்த நாட்கள் என்னைத் தனியனாய் அலையச் செய்கின்றன. விழித்தெழுந்த உடன் உன் இருப்பை உணர்த்தும் உன் நடை கேளாத  எனது காதுகள் வலிக்கின்றன. அன்புடன் என்னை இழுத்து சென்று குளியலறையில் தள்ளும் நிலையன்றி என்னை நானே தள்ளி செல்லுதல் அத்தனை எளிதல்ல இப்போது.

குளித்து முடித்து வந்த உடன் என்னைக் கண்டு உன் தாமரை முகம் மலர புன்னகைப்பாய்! அது காணாமல் ஏன் கண்கள் நனைகின்றன?. உன் முகம் காணாமல் விடியலே உணர மறுக்கிறது உள்ளம்.  நான் போட்ட காப்பியை உன்னுடன் பகிர்ந்து அருந்தாமல் நானேப் பருகும் இந்த தனிமை  மிக கொடுமை.  நீ சமைத்து தரும் மணம் கமழும் பொங்கல் நான் சமைத்த  போது கழுநீரில் இட்ட கஞ்சியானது!  

உன் தோழிகள் உன்னைத் தொலைபேசியில் அழைத்த போது உன்னைக் காணாமல் வீடு முழுதும் தேடி அலுக்கின்றன கால்கள். உன் இருப்பே இல்லாமல் அலையும் இந்த நாட்கள்  நீ இந்த வீட்டில் இருந்தபோது எனக்கு அமைந்த வசந்தங்களை நினைவூட்டும் வறண்ட நாட்களாக்கி விட்டு சென்ற நீ எப்போது மீண்டும் வருவாய்?


உன்னைக் காணாமல்  வாடி நின்ற இந்த  நெஞ்சம் நீ வரும் வழி நோக்கி காத்திருக்கும்!